Saturday, 29 December 2018

தா. கி. பட்டம்மாள் (D. K. Pattammal)

தா. கி. பட்டம்மாள்



பிறப்பு:  மார்ச் மாதம் 19 , 1919

இடம்:காஞ்சிபுரம் , தமிழ்நாடு (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகி 
இறப்பு: ஜூலை  மாதம் 16 ம் நாள் , 2009

டி கே பட்டம்மாள்  அவர்களின் இயற்பெயர் அலமேலு.  இவர் காஞ்சிபுரம் அருகில் தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதர், தாய் காந்திமதி (ராஜம்மாள்). இவரின் தாயாரும் சிறந்த பாடகி. அக்காலத்தில் பெண்கள் பொது மேடைகளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  முன்னிலையில் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அந்த மரபுகளை பின்னுக்கு தள்ளி 4 வயதிலேயே  பாடத் தொடங்கினார். இவரின் உடன்பிறந்த 3 சகோதரர்களும் பாடகர்கள். 

கர்நாடக இசையை கற்கவில்லை என்றாலும், தனது தந்தை கற்று கொடுத்த  பக்திப் பாடல்கள் மற்றும் கச்சேரி இசைகளை கேட்டே ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.  8ம் வயதில் சி.சுப்ரமணியம் பிள்ளை அவர்கள் நடத்திய போட்டியில் தியாகராஜரின்  ரக்ஷா பெட்டரே பாடலை பாடி பரிசுகளை வென்றார் . தனது 10வயதில் வானொலியில் முதன்முறையாக  பாடினார். அப்போதிருந்து டி கே பட்டம்மாள் புகழ் பெற தொடங்கினார்.

தனது முதல் கச்சேரியை எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேற்றம் செய்தார். மஹாகவி பாரதியாரின் பாடல்களை  கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடினார். 1939ல் இவருக்கு திருமணம் நடந்தேறியது. இவரின் கணவர் பெரியார் ஈஸ்வரன். 

கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி முதன் முதலாய் பாடிய பெண் என்ற பெருமை இவரையே சாரும். இவருடன் எம்.எஸ் சுப்புலட்சுமி மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரும்  சேர்ந்து  ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அக்காலத்தில் "பெண் முமூர்த்திகள்" என பெருமை பெற்றனர்.

திரைப்படத்துறையில் பாபநாசம் சிவன் அவர்களால் பாட அறிமுகப்படுத்தப் பட்டார். இருந்தாலும் இவர் பக்தி மற்றும் தேச பக்தி பாடல்களை பாடுவதிலேயே கவனம் செலுத்தினார்.  1947ல் நாம் இருவர் திரைப்படத்தில் இவர் பாடிய வெற்றி எட்டு திக்கும்  மற்றும் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடல்கள் நாற்றுப்பற்று பாடல்களாக புகழ்பெற்றன.

இவர் 2009 ஜூலை 16ல் இயற்கை எய்தினார். பாடகி  நித்யஸ்ரீ மகாதேவன் இவரின் பெயர்த்தி ஆவார். 






Friday, 9 November 2018

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (M.Balamurali Krishna)

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா



பிறப்பு: ஜூலை 6 , 1930
இடம்: சங்கரகுப்தம், கிழக்கு  கோதாவரி மாவட்டம் (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகர், பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்  மற்றும் நடிகர் 
இறப்பு: நவம்பர்  22 , 2016


இளமைப் பருவம்

மங்களம்பள்ளி  முரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் (தற்போதைய)  கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்கள் பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா இவரது பெற்றோர் ஆவர்.  பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் தந்தை, தாய் இருவருமே மிகச்சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.அவருடைய தந்தை மங்களம்பிள்ளை பட்டாபிராமையா அவர்கள், புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராகவும்   சிறந்த இசையமைப்பாளராகவும், திகழ்ந்தார். இவருடைய தாய் சூர்யகாந்தம்மா, வீணை மற்றும் வயலின் கலைஞர். சிறு வயதிலேயே தாயை இழந்த இவர் , தன்னுடைய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். பின்னர், தியாகராஜரின் சீடர் கர்நாடக இசைப் பாடகர்  “ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவிடம் முறையாக கர்நாடக இசையைப் பயின்றார்.

இசைப் பயணம்:

முரளிகிருஷ்ணாவுக்கு, தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை  உண்டு. இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே  முதல் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் புகழப்பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி,  இவரின் பெயர்க்கு முன்னால்  "பால" என்ற சொல்லைச் சேர்த்து அழைத்ததனால்  அதன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே இசைப் பணியைத் தொடங்கிய இவர், தனது பதினைந்தாவது வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் "ச ரி க ம ப த நி" ஏழு ஸ்வரங்களையும் மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளாகத் தொகுத்து வழங்கினார். வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்கள், ஜாவளிகள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், சமஸ்கிருதம்  மற்றும்  தெலுங்கில்  உருவாக்கினார். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, பஞ்சாபி மற்றும் வங்கம் என பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்த  ஒரு ‘பன்முக மேதை’ ஆவார் . கர்நாடக இசைப் பாடகராக மட்டுமல்லாமல்,  மிருதங்கம், கஞ்சிரா, வயோலா மற்றும் வயலின் வாசிக்கவும் கற்றார்.

அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பல்வேறு நாடுகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி  இந்திய இசையை வெளிநாட்டிற்கும் கொண்டு சேர்த்துள்ளார்.

திரைப்படத்துறையில்:

பால முரளிகிருஷ்ணா அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்தும், இசையமைத்தும் உள்ளார். 1967 ஆம் ஆண்டு, வெளிவந்த “பக்தா பிரஹலாதன்” என்ற  திரைப்படத்தில் நாரதராக நடித்து புகழ் பெற்றார் .

விருதுகள்:

  • 1978-ம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது”,சென்னை மியூசிக் அகாடமியால் வழங்கப்பட்டது.
  • 2002-ம் ஆண்டு தமிழ் இசைச் சங்கம் மூலம்  “இசைப் பேரறிஞர்” என்ற விருது  வழங்கப்பட்டது.
  • 2011-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது  “குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி”  இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1971-ம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.
  • 1991-ம் ஆண்டு மத்திய அரசு “பத்ம விபூஷன்” விருதையும்  வழங்கி கௌரவித்தது .
  • 2005-ம் ஆண்டு கந்தர்வ கான சாம்ராட் பட்டம் தமிழ் நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது
  • செவாலியே விருதையம் பிரான்ஸ் அரசு வழங்கி கௌரவித்தது 
  • 2010-ம் ஆண்டு கேரள மாநில திரைப்பட விருதுகள் என்ற அமைப்பு சிறந்த பாரம்பரிய இசைப் பாடகர் விருது  வழங்கியது: 

Tuesday, 30 October 2018

செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidyanatha Bhagavatar)

செம்பை வைத்தியநாத பாகவதர்



பிறப்பு: செப்டம்பர் மாதம் 1 ம் நாள் , 1895
இடம்: செம்பை, கேரளா (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகர் 
இறப்பு:அக்டோபர் மாதம் 16ம் நாள் , 1974

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள செம்பை என்னும் கிராமத்தில் பிறந்தார் . இவர் தமது கிராமத்தின் பெயராலேயே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் அனைவருமே கர்நாடக இசைப் பாடகர்களாகத் திகழ்ந்தனர். பாகவதருக்கு கருநாடக இசை, குடும்ப பாரம்பரிய கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் வித்தகரானதால் சக்ரதானம் சுப்பையர் என்று அழைக்கப்பட்டார்.

3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமே இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு தனது 8 ஆம் வயதில் அரங்கேற்ற கச்சேரியை ஒட்டப்பாலம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் தன் சகோதரன் செம்பை சுப்பிரமணிய பாகவதருடன் நிகழ்த்தினார்.

தன் சகோதரருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். 1914-ல் இருவரும் ‘செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவைத் தொடங்கி நடத்தி வந்தார்கள் . இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது .

நடேச சாஸ்திரிகள் என்பவர் , செம்பை சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு வியந்து, அவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்தார். தன்னுடைய ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் சூழலுக்கு ஏற்ப அவர்களைப் பாடவைத்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இவர்களுக்கு தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களில் கச்சேரி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. பல சபாக்களிலும் இசை விழாக்களிலும் பாடிப் புகழ்பெற்ற இவர் பிளேட் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளில் தனது பாடல்களைப் பதிவேற்றி வெளியிட்டார்.

வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களின் திறமை வெளிக்கொணர்வதிலும் செம்பை மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தார். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை அநேகமுறை கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். தனது பக்கவாத்தியக்காரர்களுடன் மிக அனுசரணையாக நடந்து கொண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்புகள் கொடுப்பார்.

கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு . இரட்டையர்களான கே. ஜி. ஜெயன் - கே. ஜி. விஜயன், கே. ஜே. யேசுதாஸ், டி. வி.கோபால கிருஷ்ணன், வி.வி.சுப்ரமணியம் மற்றும் பி.லீலா ஆகியோர்கள் இவர்களின் சீடர்களில் சிலர்.

குருவாயூரில் செம்பை இசை விழா

ஆண்டுதோறும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் இசை விழா நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கலைஞருக்கு செம்பை புரஸ்கரம் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது ரூபாய் 50,001 பணமுடிப்பு, குருவாயூரப்பன் (locket) அலங்காரப் பேழை, பாராட்டுப் பத்திரம் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.

செம்பை விருது பெற்ற கலைஞர்கள்:

பாடகர் மற்றும் மிருதங்க கலைஞருமான டி. வி. கோபால கிருஷ்ணன், வயலின் கலைஞர் எம். எஸ். கோபாலகிருஷ்ணன், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, பாடகர் பரஸ்சல பொன்னம்மாள், கர்நாடக இசைக்கலைஞர் கே. ஜி. ஜயன், வீணைக் கலைஞர் அனந்த பத்மநாபன், மிருதங்க கலைஞர் மாவேலிக்கர வேலுக்குட்டி நாயர், கர்நாடக இசைக்கலைஞர் திருச்சூர் வி. ராமச்சந்திரன், சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியோர்

70 ஆண்டுகளாக இசை உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் தனது 78ம் வயதில் (1974) காலமானார் .

விருதுகள்

  • 1940ல் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி அவர்களால் காயன காந்தர்வ விருது வழங்கப்பட்டது  
  • 1951ல் சங்கீத கலாநிதி விருதை, சென்னை மியூசிக் அகாடமி வழங்கியது 
  • 1958ல் சங்கீத நாடக அகாடமி விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியால் வழங்கப்பட்டது 
  • 1964ல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது 
  • 1973ல் பத்ம பூஷன் விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது 
  • 1996ஆம் ஆண்டு செம்பையின் நூறாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது. 

Sunday, 14 October 2018

செம்மங்குடி சீனிவாச ஐயர் (Semmangudi Srinivasa Iyer)


செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் 


செம்மங்குடி சீனிவாச ஐயர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகரான இவர் தனது மாணாக்கர்களால் "செம்மங்குடி மாமா" என அன்போடு அழைக்கப்பட்டவர்.

பிறப்பு: சூலை 25, 1908 

இடம்: திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ்நாடு 
பணி: கர்நாடக இசைப் பாடகர் 
இறப்பு: அக்டோபர் 31, 2003


ஆரம்ப வாழ்க்கை


தமிழ்நாட்டில் , தஞ்சாவூர் மாவட்டம் , திருவிடைமருதூர் வட்டம் திருக்கோடிக்காவல் என்னும் ஊரில் ராதாகிருஷ்ண ஐயர் தர்மசம்வர்தினி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டு வயது முதலே இசை கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர்களிடமும் இசையை கற்றுத் தேர்ந்தார்.


இசை வாழ்க்கை

1926 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் அரங்கேற்றியது. 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து பெரும்புகழடையத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் சுவாதித்திருநாள் இசைக் கல்லூரியில் 23 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு, அகில இந்திய வானொலியில், சென்னை கர்நாடக இசைப்பிரிவின் முதன்மைத் தயாரிப்பாளராக 1957 - 1960 வரை  பணியைத் தொடர்ந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், பல இளம் தலைமுறைகளுக்கும், கலைஞர்களுக்கும் கற்பிப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.

சிறப்புகள்

தனது 39 ஆவது வயதில் இவர் சங்கீத கலாநிதி விருதினை பெற்றார். இவ்விருது பெற்ற  இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. இதில் மற்றுமொரு  முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அதற்கு முந்தைய ஆண்டு தான்  'சங்கீத கலாநிதி' விருதினை  பெற்றிருந்தார்.

சங்கீத நாடக அகாடமி விருது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களிமிருந்து பெற்ற பொழுது 
விருதுகள்

  • 1947ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி கௌரவித்தது.
  • 1953ம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்
  • இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூசண் விருதுகளை பெற்றார் 
  • 1969ம் ஆண்டு தமிழ் இசைச்சங்கம் இசைப்பேரறிஞர் விருது, வழங்கி கௌரவித்தது 
  • மத்திய பிரதேச (இந்திய மாநிலம்) அரசு காளிதாஸ் சம்மன் விருதினை  வழங்கி கௌரவித்தது 
  • கேரளா அரசு 1979ம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது
  • தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது

Tuesday, 25 September 2018

எம். எஸ். சுப்புலக்ஷ்மி (M.S. Subbulakshmi)

உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கர்நாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொணர்ந்து, தற்போது பேணி காத்தும் வருகின்ற பல இசைக் கலைஞர்களின் பங்கு அளப்பறியது. சில கலைஞா்களின் பெயா்கள் இசை வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளன.


அவர்களில் சிலரை பற்றிய தொகுப்பு (BIOGRAPHY) தான் இந்த தளம்

எம். எஸ். சுப்புலக்ஷ்மி

பிறப்பு: செப்டம்பர் மாதம்  16 ம் நாள் , 1916

இடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகி
இறப்பு: டிசம்பர் மாதம் 11ம் நாள் , 2004

எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள், தென்மொழிகளில் தமிழ்,  மலையாளம்,   கன்னடம்,  தெலுங்கு, மற்றும் வடமொழிகளில் சமஸ்கிருதம், வங்காளம், குஜராத்தி  இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் ஒரு பாடகியாக, நடிகையாக தன்னுடைய முத்திரையைப் பதித்ததால் இசைப் பேரரசி’ என அன்போடு அழைக்கப்பட்டார். அவரின்  சாதனைகள் சிலவற்றைக் காண்போம்.
  • எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 16-09-1916 தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் சுப்பிரமணி அய்யர், சண்முகவடிவாம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் குஞ்சம்மா. இவரின் தாய் சண்முகவடிவு வாய்ப்பட்டு, வீணைமீட்டல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரின் பாட்டி அக்கம்மாலும் வயலின் வாசிப்பதில் புகழ்பெற்று விளங்கினார். 
  • இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு வயதிலிருந்தே சுப்புலட்சுமி அவர்கள் இசையில் அதீத ஆர்வத்துடன் திகழ்ந்தார். செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்  அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கி பின், பண்டிட் நாராயணராவ் வியாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசையையும் கற்றுணர்ந்தார். அதன் பின், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன்  பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், செம்மை வைத்தியநாத பாகவதர் ஆகியோரின் இசை கச்சேரிகளை தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.
  • எம்.எஸ்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவரின் முதல் குரு தாயார் சண்முகவடிவாம்பாள் அவர்களே.  1929ல் இவரின் முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேற்றப்பட்டது. தன்னுடைய இனிமையான குரல் வளத்தால் அனைவரையும் தன் வசப்படுத்திய எம்.எஸ். அவர்கள், தென்னிந்தியாவின் தலைசிறந்த கர்நாடக இசை பாடகியாக வலம் வந்தார்.  ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்றவை இவரின் மிகவும் பிரபலமான பாடல்களில் சில.
  • உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி அவர்கள் எழுதிய ஆங்கில பாடல் “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” -ஐ எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இன்றும் அனைவரின் வீடுகளிலும் தினமும் ஒலிக்கின்ற ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ போன்ற கீர்த்தனைகள் எம்.எஸ். அவர்களின் குரலில் பிரபலமான பாடல்களில் சில .
  • திரைப்படத்துறையில் எம்.எஸ். அவர்கள் 1938 ஆம் ஆண்டு, கே.சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் அவரே பாடி, நடித்து இருந்தார். ஆர்.டங்கன் இயக்கிய “சகுந்தலை” திரைப்படம், எம்.எஸ். அவர்களின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நாரதராக “சாவித்திரி” என்ற திரைப்படத்தில்  நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.
  • இவருக்கு 1945-ம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம், மிகப் பெரும் புகழைத் தேடித்தந்தது. எம்.எஸ். அவர்கள்  குரலில் வெளிவந்த “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே”, “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த” போன்ற பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் கேட்போரின் உள்ளதை உருக வைப்பவை. இப்படம்  இந்தியிலும்  தயாரிக்கப்பட்டது .

திருமண வாழ்க்கை:
  • எம்.எஸ்.அவர்கள், ‘சகுந்தலை’ படத்தின் தயாரிப்பாளரான கல்கி சதாசிவம் அவர்களை 1940-ல்  சென்னை  திருநீர்மலை கோவிலில் மணம் செய்து கொண்டார். கணவர் சதாசிவமும் ஒரு இசை பிரியராக, இசைக் கற்றவராக இருந்தார்.
இறுதி காலம்:
தனது கணவரின் மறைவிற்கு பிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். அவர்கள், சென்னை மியூசிக் அகாடமியில் கடைசியாக 1997லில் பாடினார். டிசம்பர் 12, 2004-ல் தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். அவர்கள் இயற்க்கை எய்தினார்.
விருதுகள்:
  • இந்திய அரசு இவருக்கு, இந்தியாவின்  மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” 1954-ம் ஆண்டு வழங்கியது. 
  • “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” 1967 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 
  • 1968-ம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது” “சென்னை மியூசிக் அகாடமி” மூலம் வழங்கப்பட்டது. 
  • 1970-ம் ஆண்டு “சென்னை தமிழ் இசைச்சங்கம்” இவருக்கு இசை பேரறிஞர் விருது வழங்கி கௌரவித்தது. 
  • 1974-ம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மகசேசே விருது” ரமோன் மகசேசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது. 
  • 1975-ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” விருதை அளித்து கௌரவித்தது இந்திய அரசு . 
  • 1988-ம் ஆண்டு மத்திய பிரதேச அரசு “காளிதாச சன்மான் விருது” வழங்கி கௌரவித்தது. 
  • 1990-ம் ஆண்டு “தேசிய  ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” இவருக்கு வழங்கப்பட்டது. 
  • 1996-ம் ஆண்டு “கலாரத்னா” விருதினை பெற்றார். 
  • 1998-ம் ஆண்டு இந்திய அரசு, முதலாவது மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது. 
  • 2004-ம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்றார்
  • 2005ல் இந்தியா தபால் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
  • 2006 ல், திருப்பதி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எம்.எஸ். அவர்களின் நினைவாக  வெண்கல சிலை ஒன்றை நிறுவி கௌரவித்தது.
  • ஐக்கிய நாடுகள் சபை இவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது
  • காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைக்கு எம்.எஸ். அவர்களின்  பெயரிட்டு கௌரவித்தார்கள் 

https://carnaticsingers.blogspot.com/2018/12/d-k-pattammal.html
தா. கி. பட்டம்மாள் (D. K. Pattammal)