Tuesday, 30 October 2018

செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidyanatha Bhagavatar)

செம்பை வைத்தியநாத பாகவதர்



பிறப்பு: செப்டம்பர் மாதம் 1 ம் நாள் , 1895
இடம்: செம்பை, கேரளா (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகர் 
இறப்பு:அக்டோபர் மாதம் 16ம் நாள் , 1974

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள செம்பை என்னும் கிராமத்தில் பிறந்தார் . இவர் தமது கிராமத்தின் பெயராலேயே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் அனைவருமே கர்நாடக இசைப் பாடகர்களாகத் திகழ்ந்தனர். பாகவதருக்கு கருநாடக இசை, குடும்ப பாரம்பரிய கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் வித்தகரானதால் சக்ரதானம் சுப்பையர் என்று அழைக்கப்பட்டார்.

3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமே இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு தனது 8 ஆம் வயதில் அரங்கேற்ற கச்சேரியை ஒட்டப்பாலம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் தன் சகோதரன் செம்பை சுப்பிரமணிய பாகவதருடன் நிகழ்த்தினார்.

தன் சகோதரருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். 1914-ல் இருவரும் ‘செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவைத் தொடங்கி நடத்தி வந்தார்கள் . இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது .

நடேச சாஸ்திரிகள் என்பவர் , செம்பை சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு வியந்து, அவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்தார். தன்னுடைய ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் சூழலுக்கு ஏற்ப அவர்களைப் பாடவைத்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இவர்களுக்கு தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களில் கச்சேரி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. பல சபாக்களிலும் இசை விழாக்களிலும் பாடிப் புகழ்பெற்ற இவர் பிளேட் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளில் தனது பாடல்களைப் பதிவேற்றி வெளியிட்டார்.

வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களின் திறமை வெளிக்கொணர்வதிலும் செம்பை மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தார். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை அநேகமுறை கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். தனது பக்கவாத்தியக்காரர்களுடன் மிக அனுசரணையாக நடந்து கொண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்புகள் கொடுப்பார்.

கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு . இரட்டையர்களான கே. ஜி. ஜெயன் - கே. ஜி. விஜயன், கே. ஜே. யேசுதாஸ், டி. வி.கோபால கிருஷ்ணன், வி.வி.சுப்ரமணியம் மற்றும் பி.லீலா ஆகியோர்கள் இவர்களின் சீடர்களில் சிலர்.

குருவாயூரில் செம்பை இசை விழா

ஆண்டுதோறும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் இசை விழா நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கலைஞருக்கு செம்பை புரஸ்கரம் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது ரூபாய் 50,001 பணமுடிப்பு, குருவாயூரப்பன் (locket) அலங்காரப் பேழை, பாராட்டுப் பத்திரம் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.

செம்பை விருது பெற்ற கலைஞர்கள்:

பாடகர் மற்றும் மிருதங்க கலைஞருமான டி. வி. கோபால கிருஷ்ணன், வயலின் கலைஞர் எம். எஸ். கோபாலகிருஷ்ணன், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, பாடகர் பரஸ்சல பொன்னம்மாள், கர்நாடக இசைக்கலைஞர் கே. ஜி. ஜயன், வீணைக் கலைஞர் அனந்த பத்மநாபன், மிருதங்க கலைஞர் மாவேலிக்கர வேலுக்குட்டி நாயர், கர்நாடக இசைக்கலைஞர் திருச்சூர் வி. ராமச்சந்திரன், சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியோர்

70 ஆண்டுகளாக இசை உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் தனது 78ம் வயதில் (1974) காலமானார் .

விருதுகள்

  • 1940ல் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி அவர்களால் காயன காந்தர்வ விருது வழங்கப்பட்டது  
  • 1951ல் சங்கீத கலாநிதி விருதை, சென்னை மியூசிக் அகாடமி வழங்கியது 
  • 1958ல் சங்கீத நாடக அகாடமி விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியால் வழங்கப்பட்டது 
  • 1964ல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது 
  • 1973ல் பத்ம பூஷன் விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது 
  • 1996ஆம் ஆண்டு செம்பையின் நூறாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது. 

Sunday, 14 October 2018

செம்மங்குடி சீனிவாச ஐயர் (Semmangudi Srinivasa Iyer)


செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் 


செம்மங்குடி சீனிவாச ஐயர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகரான இவர் தனது மாணாக்கர்களால் "செம்மங்குடி மாமா" என அன்போடு அழைக்கப்பட்டவர்.

பிறப்பு: சூலை 25, 1908 

இடம்: திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ்நாடு 
பணி: கர்நாடக இசைப் பாடகர் 
இறப்பு: அக்டோபர் 31, 2003


ஆரம்ப வாழ்க்கை


தமிழ்நாட்டில் , தஞ்சாவூர் மாவட்டம் , திருவிடைமருதூர் வட்டம் திருக்கோடிக்காவல் என்னும் ஊரில் ராதாகிருஷ்ண ஐயர் தர்மசம்வர்தினி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டு வயது முதலே இசை கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர்களிடமும் இசையை கற்றுத் தேர்ந்தார்.


இசை வாழ்க்கை

1926 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் அரங்கேற்றியது. 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து பெரும்புகழடையத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் சுவாதித்திருநாள் இசைக் கல்லூரியில் 23 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு, அகில இந்திய வானொலியில், சென்னை கர்நாடக இசைப்பிரிவின் முதன்மைத் தயாரிப்பாளராக 1957 - 1960 வரை  பணியைத் தொடர்ந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், பல இளம் தலைமுறைகளுக்கும், கலைஞர்களுக்கும் கற்பிப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.

சிறப்புகள்

தனது 39 ஆவது வயதில் இவர் சங்கீத கலாநிதி விருதினை பெற்றார். இவ்விருது பெற்ற  இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. இதில் மற்றுமொரு  முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அதற்கு முந்தைய ஆண்டு தான்  'சங்கீத கலாநிதி' விருதினை  பெற்றிருந்தார்.

சங்கீத நாடக அகாடமி விருது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களிமிருந்து பெற்ற பொழுது 
விருதுகள்

  • 1947ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி கௌரவித்தது.
  • 1953ம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்
  • இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூசண் விருதுகளை பெற்றார் 
  • 1969ம் ஆண்டு தமிழ் இசைச்சங்கம் இசைப்பேரறிஞர் விருது, வழங்கி கௌரவித்தது 
  • மத்திய பிரதேச (இந்திய மாநிலம்) அரசு காளிதாஸ் சம்மன் விருதினை  வழங்கி கௌரவித்தது 
  • கேரளா அரசு 1979ம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது
  • தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது